நீதிமன்றப் பணிகள் காலை 10.30 மணிக்கு தொடங்குவதற்குப் பதில் காலை 9 மணிக்கே தொடங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி உதய் யு லலித் வலியுறுத்தியுள்ளார்.
நமது நாட்டில் நீதிமன்றப் பணிகள் வேலை நாட்களில் தினமும் காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. மதியம் ஒரு மணி முதல் 2 மணி வரை உணவு இடைவேளை. 2 மணிக்கு மீண்டும் தொடங்கும் நீதிமன்றப் பணிகள் மாலை 4 மணிக்கு முடிவடைகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வழக்கமான நடைமுறையில் இருந்து விலகி, நீதிபதி லலித் இன்று காலை 9.30 மணிக்கு அமர்ந்து வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார். அவரது அமர்வில் நீதிபதிகள் எஸ் ரவீந்திர பட் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோரும் இருந்தனர்.
ஜாமீன் வழக்கில் ஆஜரான முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, முன்கூட்டியே அமர்ந்திருப்பதற்கு நீதிபதிகளை பாராட்டினார். காலை 9.30 மணி என்பது நீதிமன்றப் பணிகள் தொடங்க சரியான நேரம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி லலித், நீதிமன்றப் பணிகள் சரியாக தினமும் காலை 9 மணிக்கு தொடங்கப்பட வேண்டும் என்றும் இந்த கருத்தை தான் எப்போதும் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், நமது குழந்தைகளால் தினமும் காலை 7 மணிக்கு பள்ளிக்கு செல்ல முடியும்போது, நீதிமன்றப் பணிகளை ஏன் 9 மணிக்கு தொடங்கக் கூடாது என அவர் கேள்வி எழுப்பினார்.
காலை 9 மணிக்கு பணிகள் தொடங்கப்படுமானால் பின்னர் 11.30 மணிக்கு அரை மணி நேரம் இடைவேளை விட்டு மீண்டும் 12 மணிக்கு நீதிமன்றப் பணிகளை தொடங்கலாம் என்றும் இதன் மூலம், வழக்குகளை கையாள கூடுதல் நேரம் கிடைக்கும் என்றும் நீதிபதி லலித் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தலைமை நீதிபதி என்வி ரமணாவிற்குப் பிறகு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வரும் ஆகஸ்ட் 27ம் தேதி பொறுப்பேற்க இருப்பவர் நீதிபதி உதய் யு லலித். தலைமை நீதிபதியாக இவர் வரும் நவம்பர் 8ம் தேதி வரை இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.