“வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுச்சூழல் மற்றொரு கண்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுச்சூழல் என்பது மற்றொரு கண் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சிமன்றக் குழுவின் 3-வது கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடபெற்றது. இதில் காலநிலை மாற்ற இயக்கத்திற்கு கொள்கை சார்ந்த வழிகாட்டுதலை வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

“காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. சுற்றுச்சூழல் தொடர்பாக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.  பசுமைப் பள்ளி வகுப்பறையில் வெப்பநிலையை குறைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. திமுக அரசின் நடவடிக்கையால் தமிழ்நாட்டில் அலையாத்தி மரக்காடுகளின் பரப்பளவு இரு மடங்காக அதிகரித்துள்ளது.  பெண்களுக்கான அரசாக திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது.  பொதுப்போக்குவரத்தின் பயன்பாடு குறைவதால், போக்குவரத்து நெரிசல், மாசு அதிகரித்துள்ளது.

பொதுமக்கள், பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். தமிழ்நாட்டிற்கு வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுச்சூழல் என்பது மற்றொரு கண். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் பெண்களின் பங்கு அளப்பரியது. அரசின் நடவடிக்கையால் டிட்வா யுலின் பாதிப்பு வெகுமாக குறைக்கப்பட்டது.  சுற்றுச்சூழலுக்கான ஐ.நா.வின் உயரிய விருதை பெற்ற ஐ.ஏ.எஸ். சுப்ரியா சாகு போன்றோரால் அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. காலநிலை தொடர்பாக மாவட்ட அளவில் நடத்தப்படும் ஒருநாள் முகாம், இனி 2 நாட்கள் நடத்தப்படும்.

கடந்த 4 ஆண்டுகளில் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு கேட்ட நிதியில் 17% நிதியை மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளது. ரூ.24,670 கோடி நிதி கேட்டதில் ரூ.4,130 கோடியை மட்டும் கொடுத்துள்ளது. எத்தனையே பேரிடர்களை எதிர்கொண்டு தமிழ்நாடு வென்றுள்ளது. அதேபோல் காலநிலை மாற்ற சவாலையும் எதிர்கொண்டு தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.