விவசாயிகளின் குறைகளை மாவட்ட ஆட்சியர் தீர்க்கவில்லை என்றால் விவசாயிகள்
குறைதீர் கூட்டத்தை புறக்கணியுங்கள். டீ குடிப்பதற்காகவா கூட்டத்திற்கு விவசாயிகள் வருகின்றனர் என திமுகவின் தென்காசி எம்.பி தனுஷ் M. குமார் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வேளாண் மற்றும் உழவர் நலத் துறை சார்பில் தமிழகத்தில் பாரம்பரிய மற்றும் உள்ளூர் ரகத்தைச் சேர்ந்த பயிர் சாகுபடியை அதிகரிக்கும் வகையில் பாரம்பரிய ரகங்களின் சாகுபடி விற்பனை கண்காட்சி மற்றும் மேம்பாட்டு கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வேளாண் பல்கலை கழகத்தில் உள்ள பாரம்பரிய ரகங்கள், மத்திய மாநில அரசின் சிறப்பு திட்டங்கள், விதை உற்பத்தி மற்றும் பாரம்பரிய கால்நடைகள், பாரம்பரிய ரகங்களை மதிப்பு கூட்டுதல் ஆகியன குறித்து வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் அலுவலர்கள் கருத்தரங்கில்
எடுத்துரைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தக் கூட்டத்தில் பேசிய தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் M. குமார் பேசினார். அப்போது கூறியதாவது..
விவசாயிகளுக்கு வருமானம் வருகிறதே தவிர லாபம் கிடைப்பதில்லை. விவசாயிகள்
படும் கஷ்டத்தை யாரும் சிந்திப்பதில்லை. அரசு நெல் கொள்முதல் நிலையம் திறந்ததற்கு பின் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கிறது. அதிலும் விவசாயிகளின் ஏழ்மையை பயன்படுத்தி வியாபாரிகள் அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்கின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையத்தில் மட்டுமே தேங்காய் கொள்முதல் நிலையம்
உள்ளது. ஶ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு தாலுகாக்களில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். தமிழகத்தில் எங்கும் இல்லாத சாபக்கேடாக விருதுநகர் மாவட்டத்தில் சந்தையில் தேங்காய் விற்கும் போது 15 காய் கழிவாக பெறப்படுகிறது.
இதை தவிர்க்க கூடுதல் தேங்காய் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை
வேண்டும். அதிக சந்தை வாய்ப்புகள் குறைக்கும் போது வியாபாரிகள் கழிவை
குறைத்து தான் ஆக வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் ,டீ குடிப்பதற்காகவா விவசாயிகள் கூட்டத்திற்கு வருகின்றனர்” என திமுக எம்பி தனுஷ் M. குமார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.