”மாநில அந்தஸ்துக்காக எந்த அரசியல் சமரசத்தையும் செய்ய மாட்டேன்” – உமர் அப்துல்லா பேச்சு..!

மாநில அந்தஸ்துக்காக எந்த அரசியல் சமரசத்தையும் செய்யத் தயாராக இல்லை என்று ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா பேசியுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்து பிரிவான 370 நீக்கப்பட்டது. மேலும் அம்மாநிலம் பிரிக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. இதனை தொடர்ந்து இரு யூனியன் பிரதேசங்களும் மாநில அந்தஸ்த்து கோரி வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா பாஜகவை அரசில் சேர்க்க வேண்டும் என்றால், என் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

அனந்த்நாக் மாவட்டத்தின் அச்சாபல் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய உமர் அப்துல்லா, ”மாநில அந்தஸ்துக்காக எந்த அரசியல் சமரசத்தையும் செய்யத் தயாராக இல்லை. பாஜகவை அரசில் சேர்க்க வேண்டும் என்றால், என் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுங்கள். இங்குள்ள வேறு எந்த எம்.எல்.ஏ.வையும் முதலமைச்சராக்கி, பாஜகவுடன் சேர்ந்து அரசாங்கத்தை அமைத்து கொள்ளுங்கள். மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கும் தனது உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. பாஜகவை அரசாங்கத்தில் சேர்த்திருந்தால், அவர்கள் விரைவில் நமக்கு மாநில அந்தஸ்து வழங்கியிருப்பார்கள்,” என்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.