தேவர் தங்கக்கவச விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் யாரும் வேண்டாம் என்றும் தானே அதனை வைக்க உள்ளேன் என்றும் அறங்காவலர் மீனாள் நடராஜன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா வருகிற 28, 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது. அதிமுக சார்பில் வைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்க தேவர் தங்கக்கவசத்தை பெறுவதில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மாறி மாறி உரிமை கோரி வருகின்றனர்.

இதனிடையே, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஓ எஸ் மணியன், ஆர்.பி. உதயகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்ட எடப்பாடி தரப்பு ஆதரவு அமைச்சர்கள் பசும்பொன் தேவர் நினைவிட அறங்காவலர் காந்தி மீனாள் நடராஜனை சந்தித்து கடிதம் அளித்தனர். அதேபோல், ஓபிஎஸ் ஆதரவு மாநிலங்களவை உறுப்பினர் தர்மர், முன்னாள் மக்களவை உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் கடிதம் வழங்கினர்.

இந்த நிலையில் தேவர் நினைவிட அறங்காவலர் காந்தி மீனாள் நடராஜன் அதிமுகவினர் இடையே ஏற்படும் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தங்க கவசம் வங்கியின் லாக்கர் சாவி தன்னிடம் உள்ளது என்றும், ஓ.பன்னீர்செல்வம் வேண்டாம், எடப்பாடி பழனிசாமி வேண்டாம் தானே வங்கிக்கு சென்று தங்கக்கவசத்தை பெற்று தேவர் ஜெயந்தி விழாவில் அணிவிக்க உள்ளதாக அதிரடியான முடிவை தெரிவித்துள்ளார்.







