முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளான இன்று ஜூலை 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடி வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், இவரது புகழை போற்றி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “காமராஜரின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த அவர், சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது பயணத்தின் வளர்ச்சிக்குரிய ஆண்டுகளில் விலைமதிப்பற்ற தலைமைத்துவத்தை வழங்கினார். அவரது உயரிய சிந்தனைகளும், சமூக நீதி குறித்த உறுதிப்பாடும் நம் அனைவருக்கும் மகத்தான ஊக்கமளிக்கும்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.







