சாதி சான்றிதழ் கேட்டு தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்ட வேல்முருகன் மரணம், அரசு அதிகாரிகளின் அலட்சியத்தாலேயே நடந்தது என அவரது தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சாதி சான்றிதழ் கேட்டு கடந்த 11ஆம் தேதி வேல்முருகன் என்பவர் தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்டார். பின்னர் போராட்டத்திற்கு பிறகு அவரது உடலை உறவினர்கள் பெற்று சென்றனர். இந்நிலையில், அவரது தந்தை கலியமூர்த்தி நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில், மலைக்குறவர் சமூகமான தாங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சாதி சான்றிதழ் முறையாக கிடைக்காமல் அடிப்படை உரிமை, கல்வி உரிமை இல்லாமல் இருப்பதாக தெரிவித்தார்.
சாதி சான்றிதழ் கேட்டு அரசு அதிகாரிகளிடம் சென்றால் அவர்கள் சாதி ரீதியாக தங்களை தாழ்த்தி பேசி மனவேதனை படுத்துவதாக கூறினார். தனது மகன் வேல்முருகன் கடந்த ஐந்து ஆண்டுகளாக சாதி சான்றிதழ் கேட்டு போராடி வந்ததாகவும், அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் வேதனை அடைந்து அவர் உயிரை மாய்த்து கொண்டதாகவும் குற்றம்சாட்டினார்.
இதனிடையே, உயிரிழந்த வேல்முருகனின் குடும்பத்தினரை சட்டமன்ற உறுப்பினர் செல்ல பெருந்தகை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மலைக்குறவர் மக்கள் எஸ்சி பட்டியலில் இருப்பதாகவும் இதை மாற்றி அவர்களை பழங்குடியின மக்கள் பிரிவில் சேர்த்து அவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க திமுக அரசு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என
வலியுறுத்தினார்.
மேலும் உயிரிழந்த வேல்முருகனின் குடும்பத்தாருக்கு தமிழக அரசு நிதி வழங்க வேண்டும் எனவும் அவரது மூன்று பிள்ளைகளின் கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தார். இந்த விவகாரத்தை வைத்து ஒரு சிலர் அரசியல் செய்ய பார்ப்பதாகவும், போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் அதற்கு இடம் கொடுக்க கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.








