‘அதிமுகவை ஒன்றிணைக்க வந்துள்ளேன்’ – ஜெயலலிதா மகள் என கூறும் ஜெயலட்சுமி!

‘அதிமுகவை ஒன்றிணைக்க வந்துள்ளேன்’ என ஜெயலலிதா மகள் என கூறிவரும் ஜெயலட்சுமி தெரிவித்தார்.  தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு திடீரென பெங்களூரைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர்…

‘அதிமுகவை ஒன்றிணைக்க வந்துள்ளேன்’ என ஜெயலலிதா மகள் என கூறிவரும் ஜெயலட்சுமி தெரிவித்தார். 

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு திடீரென பெங்களூரைச் சேர்ந்த ஜெயலட்சுமி
என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் ஜெயலலிதாவின் மகள் என
கூறிக் கொண்டு தமிழ் செய்தி ஊடகங்கள் மூலம் வெளிவந்தார்.

இந்நிலையில்,  கடந்தவாரம் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில்  ‘எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற கட்சியை புதிதாக தொடங்கிய பெயரை பதிவு செய்தார்.  இதையடுத்து இன்று, ஜெயலட்சுமி தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட, வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்திருந்தார்.

மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்வதற்காக மதுரை வந்துள்ளேன்.  திருச்சி,  திருநெல்வேலி,  சேலம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளோம்.  வேறு எந்த அரசியல் கட்சிகள் ஆதரவும் இல்லை.

அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே அரசியலுக்கு வந்தேன்.  தேனி அம்மாவுக்கு மிகவும் பிடித்த தொகுதி.  ஆண்டிபட்டியில் போட்டியிட்டால் எப்போதும் வெற்றி பெறுவார்.  அதனால் சென்டிமென்டாக அங்கு போட்டியிடுகிறேன்.  தேனி தொகுதியில் வேறு யார் போட்டியிட்டாலும் எனக்கு பிரச்னை இல்லை.  நான் போட்டியிடுகிறேன் அவ்வளவுதான்.  எனக்கு மக்கள் பலம் இருப்பதால் தான் போட்டியிடுகிறேன்.

அம்மா கொண்டு வந்த திட்டங்கள் தற்போது நடைபெறவில்லை.  கட்சியும் நான்காக பிரிந்துள்ளது.  அதனால் நான் வந்து மீண்டும் அம்மா செய்த திட்டங்களை செய்ய விரும்புகிறேன்.

தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் இல்லை.  நாங்கள் வெற்றி பெற போட்டியிடுகிறோம், யாரையும் தோற்கடிப்பதற்கில்லை.  ஜெயலலிதாவை சந்தித்த போது அவருடன் இருந்த முன்னாள் அமைச்சர்கள் என்னை  பார்த்துள்ளார்கள்.  ஆனால் ஏன் அதை வெளியில் சொல்லவில்லை என்று தெரியவில்லை.

தற்போதுள்ள அதிமுகவினர் எம்ஜிஆர்,  ஜெயலலிதா குடும்பத்தை புறக்கணிக்கிறார்கள்.  யாரையும் வரவிடவில்லை அதை மீறி நான் வந்துள்ளேன்.  கட்சியை ஒன்றிணைக்க தான் வந்துள்ளேன்.  இப்போதைக்கு மாநில கட்சியாக பதிவு செய்துள்ளோம்.

இவ்வாறு ஜெயலெட்சுமி கூறினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.