இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வசூலை குவித்த திரைப்படம் ‘புஷ்பா’. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.
இந்தப் படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. தற்போது அல்லு அர்ஜூன் புஷ்பா திரைப்படத்தின் 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் 2024ம் ஆண்டு மஹர் சங்க்ராந்தி பண்டிகை அன்று வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் அல்லு அர்ஜூன் நடிக்கும் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ’அர்ஜூன் ரெட்டி’ படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கும் புதிய படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ளார். சந்தீப் ரெட்டி வாங்கா தற்போது ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘அனிமல்’ திரைப்படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு சந்தீப் ரெட்டி வாங்கா அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.







