அண்ணாமலை மீது கைவைப்பேன் என்று நான் சொல்லவில்லை என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பரத்வாஜேஸ்வரர் திருக்கோயிலில், கண்காணிப்பு கேமராக்கள் வசதியுடன் உலோகத் திருமேனி பாதுகாப்பு அறையை திறந்துவைத்தார் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில், உலோகத் திருமேனிகளை பாதுகாக்க 3,085 அறைகள் விரைவில் கட்டப்படும். கோயிலைச் சுற்றி உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுவதற்கு முதலமைச்சருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல பராமரிப்பில்லாத திருக்கோயில்களைக் கண்டறிந்து அதை மேம்படுத்தும் பணியை மாநில அரசு மேற்கொள்ள உள்ளது. சுற்றுலாத்துறையுடன் இணைந்து பக்தி சுற்றுலா திட்டம் கொரோனா தொற்று முழுவதும் முடிவுக்கு வந்த பின் செயல்படுத்தப்படும். நிலங்கள் ஆக்கிரமிப்பில் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். குயின்ஸ்லாந்திடம் இருந்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்பதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறன.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “சிதம்பரம் நடராசர் கோயிலில் பக்தர்களிடம் தீட்சிதர்கள் கடுமையாக நடந்துகொள்வது தொடர்பாக கோயில் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மன உளைச்சலின்றி இறை தரிசனம் செய்ய தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுக்கும்.
வடபழனி முருகன் கோயிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். அண்ணாமலை மீது கைவைப்பேன் என்று நான் சொல்லவில்லை. அன்பால் கூட ஒருவர் மீது கைவைக்கலாம். நிலைதடுமாறும் போது கை கொடுத்து காப்பாற்றலாம். பத்திரிகைகளில் வந்த செய்தியை வைத்து அண்ணாமலை அப்படி சொல்லியிருக்கிறார்.” என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
மேலும், “நான் தொகுதி அரசியல் செய்வதில்லை. கடத்தப்பட்ட சிலைகளை வெளிநாடுகளில் இருந்து மீட்க மத்திய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செல்போன்கள் எடுத்து செல்ல அனுமதிப்பது தொடர்பாக முதலமைச்சருடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை எடுப்போம்.” என்றும் அமைச்சர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.