“சோபா செட்டுக்கும், பெட்டிக்கும் ஆசைப்படவில்லை” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

யாரை தீயசக்தி என்று சொன்னார்களோ, அவர்களின் ஆதரவோடுதான் அந்த தூயசக்தி இன்று ஆட்சி அமைத்துள்ளார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “யாருமே எதிர்பார்க்க முடியாத தேர்தல் முடிவுகள் தான் நாம் பார்த்தோம். தேர்தலில் வெற்றி, தோல்விகள் என்பது சகஜம். ஆனால் இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை, மாற்றம் ஒன்று தான். இன்று மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணியின் நிலை என்னவென்பது அனைவருக்கும் தெரியும்.

யாரை தீயசக்தி என்று சொன்னார்களோ, அவர்களின் ஆதரவோடுதான் அந்த தூயசக்தி இன்று ஆட்சி அமைத்துள்ளார்கள். ஒரு கட்சிக்கு 6 மாத காலம் வாய்ப்புதர வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் தற்போது நிலைமை அப்படி இல்லை. எந்த பேரத்திற்கும், எந்த பதவிக்கும் ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிகதான். பணத்திற்காக, பதவிக்காக, சோஃபா செட்டிற்காக இல்லாமல், பயணிக்கும் கூட்டணிக்கு உண்மையாக இருக்கிறது தேமுதிக.

நாம் நினைத்திருந்தால் விஜய்யை பார்த்திருக்க முடியாதா? அமைச்சர் பதவிக்காக ஓடுகிறார்கள். ஆனால் நான் நினைத்திருந்தால் விஜய்யை வீடுதேடி வந்து துணை முதலமைச்சர் பதவி கொடுத்திருப்பார். ஆனால் இதற்கெல்லாம் ஆசைப்படும் கட்சி கிடையாது தேமுதிக” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.