டான் படம் பார்த்து எனக்கு சிரிப்பே வரவில்லை என உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் டான். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தமிழகம் முழுவதும் வெளியிட்டிருந்தது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றதுடன் ரூ.100 கோடி வசூலை பெற்றது. ஒரு அறிமுக இயக்குநரின் முதல் படமே 100கோடி ரூபாய் வசூல் செய்தது என்ற சாதனையையும் படைத்தது.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசுகையில், டான் படத்தை நாங்கள் தான் வாங்கி வெளியிட்டிருந்தோம். படத்தை வெளியாவதற்கு 20 நாட்களுக்கு முன்பே எனது வீட்டில் சில நண்பர்கள் உடன் பார்த்தேன். யாருக்குமே சிரிப்பு வரவில்லை. நகைச்சுவையே இல்லை.
உடனே சிவகார்த்திகேயனுக்கு போன் செய்து கடைசி இருபது நிமிடம் நன்றாக உள்ளது. கல்லூரி காட்சிகளைக் கொஞ்சம் குறைக்க வேண்டும் காமெடி சரியாக வருமா என்று சந்தேகமாக இருக்கிறது என்றேன். அவரும் சரி என்று சொன்னார். பிறகு படம் பார்த்தால் மேலும் அதிக காட்சிகளைச் சேர்த்துவிட்டார் என கூறினார்.
ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்தின் தலைப்பை கூரியதோடு மட்டுமல்லாமல் விஜய் படம் குறித்தும் நெருடலாகப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் டான் திரைப்படம் குறித்து உதயநிதி பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.








