ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெறும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 6 மாதங்கள் ஆகும் நிலையில், போர் தொடங்கிய பிறகு மூன்றாவது முறையாக போரிஸ் ஜான்சன் நேற்று உக்ரைன் சென்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அங்கு அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினார். போரால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்தும், பிற பாதிப்புகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
தனது உக்ரைன் பயணம் குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள போரிஸ் ஜான்சன், உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள நிலை அனைவரும் கவலை கொள்ள வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனை உணர்ந்தே தான் உக்ரைன் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனுக்கு இங்கிலாந்து தொடர்ந்து ஆதரவாக நிற்கும் என கூறியுள்ள இங்கிலாந்து பிரதமர், இந்த போரில் உக்ரைன் வெற்றி பெறும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு ஆதரவான தலைவர்களில் மிக முக்கியமானவராக போரிஸ் ஜான்சன் அறியப்படுகிறார். ரஷ்யா போர் தொடுத்த பிறகு கடந்த ஏப்ரலில் அந்நாட்டிற்குச் சென்ற முதல் வெளிநாட்டுத் தலைவர் அவர். பின்னர் ஜூன் மாதமும் அங்கு சென்று நிலைமையை அவர் நேரில் ஆய்வு செய்தார்.
அடுத்த மாதம் பிரதமர் பதவியில் இருந்து விலக உள்ள போரிஸ் ஜான்சன், பிரதமராக தனது கடைசி பயணத்தை நேற்று மேற்கொண்டுள்ளார்.
ஜெலன்ஸ்கியுடன் போரிஸ் ஜான்சன் நெருங்கிய நட்பு கொண்டுள்ளார். போரிஸ் ஜான்சன் போன்ற ஒரு நண்பர் உக்ரைனுக்கு கிடைத்திருப்பது உக்ரைனின் அதிர்ஷ்டம் என குறிப்பிட்டுள்ள ஜெலன்ஸ்கி, ஜான்சன் இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து விலகுவது வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து இதுவரை அந்நாட்டிற்கு 2.71 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியை இங்கிலாந்து வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.