ஆந்திராவில் நேற்றிரவு நிகழ்ந்த ரயில் விபத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து ரயில்வே தொழில்நுட்ப குழுவினர் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகப்பள்ளி ரயில் நிலையம்
அருகே நேற்று இரவு இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 10
பேர் பலியானதாகவும், 45 பேர் படுகாயம் அடைந்தனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று கருதப்படுகிறது.
நேற்று இரவு நடைபெற்ற விபத்தில் மின்சார வயர் அறுந்து விழுந்த காரணத்தால்
விசாகப்பட்டினத்தில் இருந்து முதலில் சென்ற ரயில் கண்டகபள்ளி ரயில் நிலையம்
அருகே நின்று கொண்டிருந்த நிலையில் அதன்பின் வந்த ரயில் நின்று கொண்டிருந்த
ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு அல்லது இயந்திர கோளாறு ஆகியவற்றின் காரணமாக வழித்தடத்தின் இடையே ரயில் நிறுத்தப்பட்டால் அது பற்றிய தகவல் உடனடியாக ரயில்வே துறையில் அமலில் இருக்கும். தானியங்கி தகவல் தொழில்நுட்ப முறை மூலம் அருகில் உள்ள ரயில் நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிக்கு கிடைத்துவிடும். அதன் அடிப்படையில் அதே வழித்தடத்தில் பின்னால் வந்து கொண்டிருக்கும் ரயிலின் ஓட்டுனருக்கு தகவல் அளித்து அவரை எச்சரிக்கை செய்ய வாய்ப்புகள் உள்ளன.
இதையும் படியுங்கள்:மதுரையில் மருது சகோதரர்கள் சிலைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
ஆனால் நேற்று நடைபெற்ற விபத்தில் ஒரு ரயில் இடையில் நிறுத்தப்பட்ட நிலையில்
அது பற்றிய தகவல் ரயில்வே அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லையா அல்லது கிடைக்கும்
பின்னால் வந்து கொண்டிருந்த பலாசா பேசஞ்சர் ரயிலில் ஓட்டுநருக்கு அவர்கள்
தகவலை தெரிவிக்கவில்லையா தகவல் தெரிந்தும் பின்னால் வந்து கொண்டிருந்த
ரயிலில் ஓட்டுநர் அஜயக்கிரதையாக இருந்து விட்டாரா அல்லது இதில் ஏதாவது சதி
உள்ளதா என்ற கேள்விகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் ரயில் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்த ரயில்வே
தொழில்நுட்ப குழுவினர் விபத்திற்கு காரணம் தொழில் நுட்ப
கோளாறா அல்லது தகவல் தெரிந்தும் பின்னால் வந்து கொண்டிருந்த ரயிலின் ஓட்டுனர்
அஜாக்கிரதையாக இருந்து விட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாயும்,
படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா இரண்டரை லட்சம் ரூபாயும், லேசாக
காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என்று
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர், ஆந்திர மாநில பேரிடர் மேலாண்மை
மீட்பு குழுவினர், ரயில்வே பாதுகாப்பு படையினர், போலீசார், தீயணைப்பு
படையினர், வருவாய் துறையினர் ஆகியோர் மீட்பு பணியில் தொடர்ந்து தீவிரமாக
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.







