மாநிலங்களவையில் பெரும் பரபரப்பு – எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

கப்பல் போக்குவரத்து மசோதா விவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவை எதிர்க்கட்சிகள் எம்.பி.-க்கள் வெளிநடப்பு செய்தனர்.

 

இன்று (ஆகஸ்ட் 11, 2025) நாடாளுமன்ற மாநிலங்களவையில், கப்பல் போக்குவரத்து மசோதா தொடர்பான விவாதத்தின்போது ஏற்பட்ட கடும் அமளியால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இந்நிலையில் மல்லிகார்ஜுன் கார்கே, மசோதாவுக்கு முன்னதாக சில முக்கிய விஷயங்களைப் பற்றிப் பேச முயன்றார். ஆனால், அவைத் தலைவர் அவரை பேச அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவையின் விதிகளின்படி, பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிரானது என்றும், இது ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்படுவதாகவும் அவர்கள் கோஷமிட்டனர். இந்தச் சம்பவத்தால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆளும் கட்சி உறுப்பினர்கள், உடனடியாக மசோதா மீதான விவாதத்தைத் தொடங்குமாறு வலியுறுத்தினர். ஆனால், எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்தனர். அவைத் தலைவரின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., ஆம் ஆத்மி, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளின் எம்.பி.-க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த வெளிநடப்பு, நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான மோதலை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நிகழ்வு, நாடாளுமன்றத்தின் ஜனநாயக நடைமுறைகள் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சிகளின் குரல்கள் நசுக்கப்படுவதாக பல அரசியல் நோக்கர்கள் விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.