ஆதி திராவிட குடும்பங்களுக்கு வழங்க ஒதுக்கிய நிதி எவ்வளவு? நீதிமன்றம் கேள்வி

மத்திய அரசு வழங்கிய தொகை எவ்வளவு என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக உள்துறைச் செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு விதிகள்படி கொலை,…

மத்திய அரசு வழங்கிய தொகை எவ்வளவு என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக உள்துறைச் செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு விதிகள்படி கொலை, மரணம், பாலியல் வன்கொடுமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு விதிகள்படி கொலை, மரணம், பாலியல் பலாத்காரம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு 3 மாதத்தில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை, பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு கல்வி, மூன்று மாதங்களுக்கு வீட்டுக்கு தேவையான அரசி, கோதுமை, பருப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும் எனக்
கூறப்பட்டுள்ளது.

இந்தச் சட்டப்படி பாதிக்கப்பட்டோரின் ஆதிதிராவிடர், பழங்குடியினர் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே, தமிழகத்தில் 2001 முதல் 2017 வரை வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, கொலை வழக்கு பதியப்பட்ட வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் விதிகளின் அடிப்படையில் விவசாய நிலம்,வேலைவாய்ப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. ஆனால், இதற்காக மத்திய அரசு வழங்கும் தொகையை, மாநில அரசு திருப்பி அனுப்பி வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு உண்மையா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “மத்திய அரசு வழங்கிய தொகை எவ்வளவு? இதுவரை தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கொலை வழக்குகளாக பதியப்பட்ட வழக்குகள் எத்தனை? அவர்களில் எத்தனை குடும்பத்தினருக்கு விவசாய நிலம், அரசு வேலைவாய்ப்பு, மாத உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது? எவ்வளவு தொகை பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறித்து தமிழக உள்துறைச் செயலர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.