சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு விசாரணைக்கு கூடுதல் கால அவகாசம்
கோரி மதுரை மாவட்ட நீதிமன்ற தரப்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் எத்தனை சாட்சியங்கள்
விசாரிக்கப்பட்டுள்ளன? எத்தனை சாட்சியங்கள் விசாரிக்கப்பட உள்ளது? எவ்வளவு
நாள் காலவாகசம் தேவை? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற
மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சாத்தான்குளம் தந்தை மகன்
உயிரிழந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவு பிறப்பிக்கக் கோரி
செல்வராணி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும்
சாத்தான்குளம் தந்தை- ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கு
விசாரணையை ஆறு மாதத்திற்குள் முடிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால், 6 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க இயலவில்லை. எனவே, வழக்கு விசாரணையை முடிக்க மேலும் கால அவகாசம் வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 5 மாத கால கூடுதல் அவகாச வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐ தரப்பில்,” இந்த வழக்கில் 105 சாட்சியங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதுவரை 40 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் குற்றப்பத்திரிகை கடந்த
வாரம் தாக்கல் செய்யபட்டுள்ளது. எனவே கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும்” என
கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நீதிபதி, “விசாரணை நீதிமன்றம் இதுவரை எத்தனை சாட்சியங்களை விசாரித்துள்ளது? எத்தனை சாட்சியங்கள் விசாரிக்க படவுள்ளனர்? எவ்வளவு நாள் கால அவகாசம் தேவை? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.








