வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் பூச்சி முருகன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை திருமங்கலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ‘சி’ பிளாக்கில் நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் மின் இணைப்பு கம்பிகளில் தீ விபத்து ஏற்பட்டது. 40 நிமிடங்கள் போராடி தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நான்கு பிளாக்குகள் கொண்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 2018 முதல் மக்கள் குடியேறி வந்தனர். 2019 இல் ஒரு முறை, 2020 இல் ஒரு முறை, 2021இல் இருமுறை தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 2022இல் தற்போது மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தரமற்ற மின் இணைப்புக் கம்பிகளால் தீ விபத்து ஏற்படுவதாக குடியிருப்புதாரர்கள் குற்றம்சாட்டினர். பெரும் சேதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு இப்பிரச்னையில்உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக நேற்று செய்தி வெளியிட்ட இரண்டு மணி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர், மண்டல குழுத் தலைவர் மற்றும் மின்வாரிய வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி முருகன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.








