அமெரிக்காவில் வெடித்த வன்முறை; துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலி!

அமெரிக்காவில் வன்முறையில் ஈடுபட்டுள்ளவர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலியானார். சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிக இடங்களில் வெற்றி…

அமெரிக்காவில் வன்முறையில் ஈடுபட்டுள்ளவர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலியானார்.

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிக இடங்களில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் ஏற்க மறுத்து வருகிறார். தேர்தலில் முறைகேடு செய்து பைடன் வெற்றி பெற்றுள்ளதாகவும், அதனால் முறையான நடவடிக்கை வேண்டும் என்றும் தொடர்ந்து கூறி வருகிறார். மேலும் அரிசோனா மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து ட்ரம்ப் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு அமெரிக்க செனட் சபை மறுப்பு தெரிவித்து அரிசோனாவில் பைடனின் வெற்றியை உறுதிசெய்தது.

அவரது வெற்றியை அமெரிக்க நாடாளுமன்றம் அங்கீகரித்து ஒப்புதல் வழங்கவிருந்த நிலையில், அங்கு பெரும் போராட்டம் வெடித்துள்ளது. ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் கேபிட்டல் கட்டட வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டனர். தடைகளை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்ததால் எம்.பி.,க்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். வன்முறை அதிகரித்ததால், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பெண் ஒருவர் பலியானார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என ட்ரம்ப் கூறியுள்ளார்.

இதனிடையே வன்முறையை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதாக அடுத்த 24 மணிநேரத்திற்கு ட்ரம்ப்பின் ஃபேஸ்புக் பக்கம் முடக்கக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக ட்ரம்ப் பேசிய காணொலிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply