கிருஷ்ணகிரி, பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வடமாநில தொழிலாளர்கள் 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளியில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில்
டெல்டா தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 2000-க்கும்
மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதனடையில் நேற்று
இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்கள், கிருஷ்ணகிரி
கே தியேட்டர் சாலையில் இயங்கி வரும் சக்தி ஃபாஸ்ட் ஃபுட் என்கின்ற கடையிலிருந்து,
150 சிக்கன் ரைஸ் வாங்கி வந்து சாப்பிட்டுள்ளனர்.
மேலும், சாப்பிட்ட சிறிது நேரத்தில், 26 பேருக்கும் வாந்தி மற்றும் வயிற்று போக்கு
ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக இவர்களை மீட்டு,
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி
வைத்தனர். அங்கு பாதிக்கப்பட்ட வட மாநில தொழிலாளர்களுக்கு சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, சிக்கன் ரைஸ் சாப்பிட்டு 26 நபர்களுக்கு வயிற்றுப்போக்கு மட்டும்
வாந்தி ஏற்பட்ட சம்பவம் குறித்து, டெல்டா நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் ஆனந்த்
அளித்த புகாரின் அடிப்படையில், குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், கடை உரிமையாளரான கிருஷ்ணகிரி சமத்துவபுரத்தை சேர்ந்த சென்னப்பன்
என்பவரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு பின் ஜாமினில் அனுப்பினர்.
மேலும், அந்த கடையில் கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்
சோதனை மேற்கொண்டு, அங்கு இருந்த இறைச்சிகளை கைப்பற்றி ஆய்வுக்காக
சேலத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஷவர்மா போன்ற அசைவ
உணவுகள் சாப்பிட்டு பலர் பாதிப்படைந்த நிலையில், கிருஷ்ணகிரியிலும் சிக்கன்
ரைஸ் சாப்பிட்டு 26 பேர் உடல்நல குறைவு ஏற்பட்ட சம்பவம், பொதுமக்கள் மத்தியில்
பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கு. பாலமுருகன்







