நடிகர் விக்ரம் உடல்நிலைக் குறித்து மருத்துவமனை விளக்கம்

நடிகர் விக்ரம் உடல் நிலை குறித்து வதந்திகள் பரவி வந்த நிலையில் காவேரி மருந்துவமனை நிர்வாகம் அவரது உடல்நிலை குறித்து விளக்கமளித்துள்ளது.  தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இயக்குநர்…

நடிகர் விக்ரம் உடல் நிலை குறித்து வதந்திகள் பரவி வந்த நிலையில் காவேரி மருந்துவமனை நிர்வாகம் அவரது உடல்நிலை குறித்து விளக்கமளித்துள்ளது. 

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் அவர் நடித்துள்ள பொன்னியின் செல்வம் படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற இருக்கிறது.

உடல்நலக்குறைவு

இந்த நிலையில் நடிகர் விக்ரம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டதாக அவரது மக்கள் தொடர்பு அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.

வதந்தி

இதையடுத்து நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வதந்திகள் பரவின. இதையடுத்து அவரது மகன் துருவ் விக்ரம் மற்றும் விக்ரமின் மேலாளர் ஆகியோர் நடிகர் விக்ரம் நெஞ்சுவலி காரணமாக தான் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தனர்.

மருத்துவமனை அறிவிப்பு

இந்நிலையில் நடிகர் விக்ரம் சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், பிரபல நடிகரான விக்ரம் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவருக்கு சிறப்பு மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.