ஆணவப் படுகொலைகளை தடுக்க அரசு சட்டம் இயற்ற வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.
ஈழ விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த திலீபனின் 34வது நினைவு நாளையொட்டி விசிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நினைவேந்தல் கூட்டம் இன்று நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “இலங்கை அரசு மீதான இந்திய அரசின் அணுகுமுறை மாறவில்லை. பாஜக அரசு ஆட்சிக்கு வந்தால் இலங்கை அரசின் ஆணவம் அடக்கப்படும் என கூறினர். ஆனால், ஈழத் தமிழர்களுக்கு நன்மை அளிக்கும் எந்த நகர்வையும் முன்னெடுக்கவில்லை” என குற்றம்சாட்டினார்.
முருகேசன்- கண்ணகி ஆணவ படுகொலையை முதன் முதலில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததே விசிகதான் என்று சுட்டிக்காட்டிய அவர், ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கான தனி சட்டம் இயற்ற வேண்டும் எனவும், அதற்கு சரியான நேரம் இதுதான் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
மேலும், காவல்துறை, கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சாதிய பாகுபாடு உள்ளது, அதன் வெளிப்பாடாகவே, சேலம் மாவட்டம் மோரூரில் விசிக கொடி ஏற்றக்கூடாது என வன்முறை நடந்தது என்றும் குற்றம்சாட்டினார் திருமாவளவன்.








