கோவையில் உள்ள மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் வீடுகளில் கேரள நக்சல் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
கேரள மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் சித்திரப்புள்ளி ராஜன் என்ற மாவோயிஸ்ட் கேரள மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் கேரள மாநில போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவருக்கு கோவையில் ஆதரவாளர்கள் சிலர் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கேரள நீதிமன்ற அனுமதி பெற்று கோவை வந்த கேரளமாநில நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் இடையார்பாளையம், சுங்கம்,உக்கடம் ஆகிய பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
இடையார் பாளையம் பகுதியில் பல்மருத்துவர் தினேஷ் என்பவரது வீட்டில் சோதனையிட்ட போலீசார், பல் மருத்துவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதேபோன்று உக்கடம் பகுதியில் உள்ள பார்த்திபன் என்பவரது வீட்டிலும், சுங்கம் பகுதியில் உள்ள ராஜேஷ் என்பவரது வீட்டிலும் கேரள மாநில நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் கைதான மாவோயிஸ்ட் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் கேரளாவில் இருத்து வந்த தண்டர்போல்ட் போலீசார் 3 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களின் வீடுகளில் இருந்து சிடி, பென்ரைவ், சுவரொட்டிகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை கேரள மாநில போலீசார் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.







