தீபாவளி அல்லது தீப ஒளித் திருநாள் என்பது,இந்துக்களின் முக்கியமானதொரு பண்டிகை. இந்தியா மட்டுமின்றி, நேபாளம், இலங்கை, மியான்மர், மலேசியா, சிங்கப்பூர், பிஜி தீவுகள் போன்ற பல பிரதேசங்களில் கொண்டாடப்படும் பண்டிகை இது. சீக்கியர்கள், சமணர்கள் உட்பட வேறு பலரும் இதை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
தீபம் என்றால் ஒளி, ஆவளி என்றால் வரிசை, வரிசையாக விளக்கேற்றி, இருள் நீக்கி ஒளி தரும் இனிய பண்டிகையிது. தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் வாத்மாவும் வாசம் செய்து அருள் தரும் அற்புதமான பண்டிகை. நம்மில் உள்ள பொறாமை குணம், அகங்காரம், திமிர், தலைக்கனம் போன்ற தீய குணங்களை விட்டொழித்து, நல்லவனாக,வல்லவனாகத் திகழ, இப்பண்டிகை வழி காட்டுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருக்கும் எண்ணற்றோரின் வாழ்வில் விடியலை ஏற்படுத்தும் பண்டிகையிது சான்றாக,துணி சம்பந்தமான தொழில், பலகாரம், இனிப்புதொழில், வெடி, மத்தாப்புத் தொழில், பூசை சாமான்கள், பூ,பழம் விற்பனை தவிர சாஸ்திரம் படித்து பூஜை செய்து கொடுப்போர், இப்படி எண்ணிக்கைக்கு அடங்காதவர்களின் வாழ்வில் வசந்தம் ஏற்படுத்தும் வண்ணத் திருவிழா இது. இதன் “தனிச் சிறப்பம்”கூட இதுவே.
இறைவன் ஜோதி வடிவில் இருக்கிறான் என்பதைத் திருவண்ணாமலைத் தீபத்திருவிழா நமக்கு உணர்த்துகிறது. அப்படி ஜோதியாக உள்ள இறைவனை,வழிபடச் சிறந்த பண்டிகைநாளாக இதைக் கருதுகின்றனர். இந்நாளில் கடவுள் ஒரு நல்லாசிரியனாக வந்து,நம்மைத் தீமைகளிலிருந்து காத்து இரட்சிக்கிறார்.அதற்காக பூமாலை, புஷ்பம்,பழங்கள்,தானியங்கள் எல்லாவற்றையும் படைத்து,அவனிடமிருந்து பெற்றதை அவனுக்கே நிவேதனம் செய்து, நமது ஐம்புலன்களையும் பூஜையில் அர்ப்பணிக்கிறோம் என்பது ஐதீகம்.
லக்ஷ்மி பூஜையின் தாத்பர்யமும் அதேதான். அது நன்றி நவிலுவதற்கான உயர்ந்த பூஜை. இதில் சொல்லப்படும் மந்திரங்களனைத்தும், மனித குல உயர்விற்கானது. இதை ரிக் வேதம் ஸ்ரீசுக்தம் தெளிவாகச் சொல்லும். பூஜைகளின் அர்த்தம் தெரியாமல் இருக்கலாம், ஆனால் அந்த மந்திரங்களின் அதிர்வுகள் அதிர்வலைகள் ஒருவனை இழுக்கும். நாளடைவில் அதுவே அங்கம் ஒன்றாக ஆகி, அது வேறு, அவன் வேறு எனும் கூறுபாட்டை நீக்கி விடும். இதைத்தான் பெரியவர்கள், ஞானிகள் வேதம் எனவும் வேதாந்தம் எனவும் தெளிவு படுத்துவர்.
கலியுகத்தில், தெய்வ நம்பிக்கை நலிவுற்று, தீய எண்ணங்கள் பொலிவுறும் பேராசை, கோபம் ஆகிய கெட்ட எண்ணங்களை ஒதுக்கி, தெய்வ அருளோடு, நல்லெண்ணம் மிக்கவராய் திகழலாம் என்பது ஐதீகம். வெடி வழிபாடு “நேர்ச்சை வெடி” என்ற பெயரில் பூஜை நடத்தும் ஆலயம் ஒன்றைப்பற்றி இப்போது தெரிந்து கொள்வது பொருத்தமானதே. அது குமரி மாவட்டத்தில் நல்லூர் கண்டனில் உள்ளது. தீபாவளி அமாவாசையில்,”ஓடத்திருவிழா”நடக்கும் மற்றொரு ஊர்,திருக்களம்பூர். இது கும்பகோணத்திலிருந்து சுமார் 22 கி மீ தூரத்தில் உள்ளது.தீபாவளியை உள்ளடக்கிய இதன் வரலாறு மிகவும் அற்புதமானது..
இங்கு,திருஞான சம்பத் தருக்காக தீபாவளி , நடு இரவில் நடக்க வேண்டிய பூஜையை(அர்த்த ஜாம பூஜை), மறுநாள் அதிகாலை (உஷா காலம்) சிவ பெருமான் ஏற்று அருளிய கதை இது. தீபாவளி இரவில் ஐப்பசி அமாவாசையில்,ஞான சம்பந்தப் பெருமான் வருவதை அறிந்த ஊர் மக்கள், தத்தம் வீடுகளில் அகல் விளக்கேற்றிக் கடும் மழையிலும் காத்திருந்தனர். வெட்டாறு வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது.ஓடங்கள் நின்றிருந்தன, செலுத்த ஆளில்லாமல். ஈசனைத் தரிசிக்கலாம் திரும்பக் கூடாதென்ற உறுதியுடன்,படகு ஒன்றில் ஏறி அமர,துடுப்புப் போடாமலேயே,ஓடம் செல்ல ஆரம்பித்தது.
ஞானசம்பந்தர் கூறிய பஞ்சாட்சரமும், அவர் பாடிய பதிகமும், துடுப்பின்றி ஓடம் பயணிக்க துணையாயின. ஆற்றின் மறு கரையில், ஈசன், உமையவளுடன் சம்மந்தருக்குக் காட்சி தந்து மறைந்தார். மக்கள் சம்மந்த பெருமானின் வருகைக்காக,தீபங்கள் அணையாது காத்திருந்தனர். அசீரீரியின் காரணம்,அர்ச்சகர்களும் காத்திருக்க, பதிகங்களைப் பாடிய படியே ஆலயத்தில் நுழைந்தார். ஆண்டவனுக்கு அர்த்த ஜாம பூஜை,மறுநாள் அதிகாலை நடந்தேறியது. இதன் நினைவாக தீபாவளியன்று “ஓடத்திருவிழா” இங்கு நடந்து வருகிறது.
நரஹாசூரனை அழிக்க வந்த கண்ண பிரான், அதற்கு முன்பாக,அசுரன் தமக்குப் பாது காப்பு அரணாக வைத்திருந்த, ‘கிரி துர்க்கம்'(மண்), அக்னி துர்க்கம் (நெருப்பு), ஜல துர்க்கம் (நீர்), வாயு துர்க்கம் (காற்று) கோட்டைகளை உடைத்தெரிந்தார் என்பதன் பொருள், “பஞ்ச பூதங்களினாலான நமது உடலில், இறைவனை அமர்த்தி அழகு பார்க்க அவன் நம் எண்ணத்தில் கோலோச்சும் அறியாமை எனும் இருளை அகற்றி, ஞான ஒளி ஏற்றி, நம்மைத் துன்ப, துயரங்களிலிருந்து காத்து அருளுவார் என்பதே. ஆச்சர்யமூட்டும் அதிசய தீபாவளி அடுத்த கட்டுரையில் … (தொடரும்)
- சுப்பிரமணியன் , கட்டுரையாளர்