தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகள் கொட்டுவதைத் தடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் பிற மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசியைச் சேர்ந்த சிதம்பரம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு…

தமிழ்நாட்டில் பிற மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க
தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தென்காசியைச் சேர்ந்த சிதம்பரம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற
அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மருத்துவ கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. இதை தடுக்க வேண்டும் என கடந்த 2018 ஆண்டு பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது அப்போது நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுகாதாரத் துறை, காவல் துறை, போக்குவரத்து துறைகளின் அலுவலர்களை இணைத்து மருத்துவக் கழிவுகள் மேலாண்மை குழு அமைக்கப்பட்டு மருத்துவ கழிவுகள் நெல்லை மாவட்டத்திற்குள் நுழையாதவகையில் முன்
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகிறது என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

ஆனால், கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது.
எனவே, மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்காத நெல்லை மாவட்ட ஆட்சியர் மீது
நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜெயசந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு
வந்தது. அப்போது, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார், உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிவிப்புபடி மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை தடுக்கும் கண்காணிப்பு குழு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து தமிழ்நாட்டில் எல்லையோர மாவட்டங்கள் வழியாக வருவதற்கு
கோவை மாவட்டத்தில் 14 வழிகளும், கன்னியாகுமரியிலிருந்து 15 வழிகளும், தேனி
மாவட்டம் வழியாக வருவதற்கு 3 வழி தடங்களும், தென்காசி மாவட்டம் வழியாக
வருவதற்கு 2 வழித்தடங்கள் உள்ளன. எல்லையோர மாவட்டங்களில் உள்ள இந்த வழிதடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

கோவை, கன்னியாகுமரி, தேனி, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் எந்த விதமான வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை. கடந்த 2022- 2023 ஆண்டுகளில் தென்காசி மாவட்டத்தில் கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டியதாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தில் தான் தொடர்ந்து கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.

தென்காசி மருத்துவக் கழிவுகளை கொட்டும் இடமாக மாறி வருகிறது. கண்காணிப்பு குழு நியமித்து தொடர்ந்து மருத்துவக் கழிவுகளை கொட்டுவது தொடர்பாக தொடர்ந்து எல்லையோர மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகிறதா என தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு வருகிறது என பதில் மனுவில் தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து நீதிபதிகள், தமிழ்நாட்டில் பிற மாநில மருத்துவ கழிவுகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை 2 வாரம் ஒத்திவைத்தனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.