பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் பிரமாண்டமாக உருவாக்கிய படம் தான் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டிருந்த பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
லைகா புரொடக்ஷன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் உருவான இப்படத்தின் முதல் பாகம் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற முதல் பாகத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று வெளியாகி உள்ளது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3888 மேற்பட்ட இணையதளங்களில் வெளியிடுவதைத் தடுக்க இணைய தள சேவை நிறுவனங்கள் தடுக்கக் கோரி லைகா பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்த நிலையில் வழக்கில் நீதிபதி எஸ்.சௌந்தர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.







