பணம் கேட்டு தன்னை சிலர் மிரட்டுவதாக உயிரை மாய்த்துக் கொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ராவை உயிரிழப்புக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை காவல் துறையினர் கைது செய்தனர். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அரசியலில் முக்கிய அந்தஸ்தில் உள்ள சிலருக்கு நடிகை சித்ராவின் மரணத்தில் தொடர்பு இருப்பதாக அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பண பலமும் செல்வாக்கும் மிக்க அந்த நபர்கள் குறித்த உண்மையை தான் வெளியே கூறிவிடுவேனோ என்கிற எண்ணத்தில் சிலர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், தாம் நிரபராதி என சித்ராவின் நண்பர்களுக்கு தெரியும் என்றும் ஆனால் அச்சம் காரணமாக அது குறித்து உண்மையை வெளியில் சொல்ல அவர்கள் தயங்குவதாகவும் ஹேம்நாத் தெரிவித்துள்ளார்.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறியுள்ள ஹேம்நாத், காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். ஹேம்நாத் மீது பலருக்கும் பல்வேறுபட்ட கருத்துகள் இருந்தாலும், தற்போது அவர், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறியுள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.









