அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக பல மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரழிவு மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
அசாமில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மழை மேலும் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, அடுத்த 48 மணி நேரத்துக்கு மிக கனமழை பெய்யும் என அறிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மாநில பேரழிவு மேலாண்மை ஆணையம் வெளியிட்ட கூறியதாவது:
“அசாமில் பெய்த கனமழைக்கு மொத்தம் 4,95,799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமுல்பூர் மாவட்டத்தில் நேற்று ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் பஜாலி, பக்ஸா, பார்பெட்டா, பிஸ்வநாத், போங்கைகான், சிராங், டாராங், தாமாஜி, துப்ரி, திப்ருகர், கோலகத், ஹோஜாய், கம்ரூப், கோக்ராஜ்ஹார், லகிம்பூர், மஜூலி, நாகோன், நல்பாரி மற்றும் சோனிட்பூர் ஆகிய மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பஜாலி மற்றும் தாராங்கில் பெரும்பாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு மாவட்டங்களிலும் 58 வருவாய் வட்டங்களில் சுமார் 1,350 கிராமங்கள் உள்ளன. அவற்றில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. சுமார் 14,035 பேர் மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட 162 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவம் மற்றும் பிற அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், 4,091 ஹெக்டர் நிலங்களுக்கு மேல் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதுதவிர பாலங்கள், பள்ளிகள் மற்றும் வீடுகள் உள்ளிட்டவைகள் சேதம் அடைந்துள்ளன. இந்நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. பிரம்மபுத்திரா, மனாஸ் மற்றும் புத்மாரி நதிகளில் அபாய அளவை விட நீர்மட்டம் உயர்ந்துள்ளது.” இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.







