மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஐம்பதாயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி பயிர்கள் நடவு செய்யப்பட்டு தற்போது அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மயிலாடுதுறையில் இன்று காலை நிலவரப்படி 4 சென்டிமீட்டர் மழையும், செம்பனார்கோயிலில் 7 சென்டிமீட்டர் மழையும், சீர்காழியில் 3 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக பெய்த மழை காரணமாக வயல்களில் அதிக அளவு தண்ணீர் சூழ்ந்து பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் அறுவடை செய்ய வேண்டிய நெல்மணிகள் வயலில் உதிர்ந்தும் தண்ணீரில் மூழ்கியும், முளைத்தும் அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் தண்ணீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒரு சில வயல்களில் தண்ணீர் வடிய வழியில்லாமல் தொடர்ச்சியாக தேங்கி நிற்கின்றது. ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ள நிலையில் தொடர் கனமழையால் இந்த ஆண்டு மிகப் பெரிய இழப்பை சந்தித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.