தமிழகத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியான வெள்ளநீரினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ஈரோடு, திருவாரூர், கடலூர், திருப்பூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தின் போது, மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு உத்தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்களை முதலமைச்சர் வழங்கினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், மழை காரணமாக அணைகளில் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், போதிய முன்னறிவிப்பின்றி, மக்கள் எதிர்பாராத நேரத்தில் அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகரிக்கக் கூடாது. இரவு நேரங்களில் தண்ணீர் வெளியேற்ற அளவை அதிகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும். பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்ட மக்களுக்கு தரமான உணவு, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்கள், நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களுக்கும் கரையோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.
சில இடங்களில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் வீணாவதாக செய்திகள் வருகின்றன. நெல் மூட்டைகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாத வகையில் தார்பாய்கள் கொண்டு மூட வேண்டும். நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்களுக்கு மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் சேதம் ஏற்பட்டிருந்தால் உடனடியாக நேரடி கள ஆய்வு செய்து மாவட்ட கலெக்டர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.








