சென்னையில் நேற்று இரவு பெய்த கனமழையினால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்பதற்காக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில், ஆவடியில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் விரைந்துள்ளனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவடங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். சென்னையில் பெய்துவரும் கனமழையால் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
நுங்கம்பாக்கம், விருகம்பாக்கம், கிண்டி, ராமாபுரம், வளசரவாக்கம், போரூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் மழை பாதிப்புகள் குறித்த புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை பூந்தமல்லி உட்கோட்டம் பேட்டாலியன் 13 பிரிவில் இருந்து சென்னையில் நேற்று இரவு கொட்டி தீர்த்த கனமழையால் சாலையில் முறிந்து விழுந்து மரங்கள் போன்றவற்றை அப்புறப்படுத்துவதற்காகவும், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரில் இருக்கும் மக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லவும் சுமார் 100க்கும் மேற்பட்ட பேரிடர் மீட்பு படையினர் தமிழக டிஜிபி உத்தரவின் பெயரில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா