சிம்லாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து வட மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கனமழை காரணமாக மண்டி – குலு தேசிய நெடுஞ்சாலையில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளது. குறிப்பாக, சண்டிகர்-மனாலி நெடுஞ்சாலையில் மண்டிக்கும் பாண்டோவுக்கும் இடையே 6 மைலில் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதால் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டது. இதனால், இந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
மணாலி அருகே பஹாங்கில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பல கடைகள் அடித்துச் செல்லப்பட்டன. பியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து பாண்டோ அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் குலு மாவட்டத்தில் பாட்லிகுஹால் அருகே ஆற்றின் கரையோரமாக இருந்த வீடு ஒன்று நீரில் மூழ்கியது. குலுவில் இடிபாடுகளுக்குள் இருந்து பெண் ஒருவர் மீட்கப்பட்டார்.
மேலும் மாநிலத்தில் மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட மொத்தம் 736 சாலைகள் போக்குவரத்துக்காக தடை செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் 1,743 மின்விநியோக மின்மாற்றிகள் பாதிக்கப்பட்டு, 138 குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல இடங்களில் மின் வினியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது. சிம்லாவில் பெய்த கனமழையால் அந்த மாவட்டத்தில் கோட்கர் கிராமத்தில் இன்று காலை வீடு இடிந்து விழுந்ததில் கணவன், மனைவி மற்றும் அவர்களது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவு காரணமாக வீடு இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் அந்த பகுதி மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கனமழையால் பாண்டோ பஜார் தண்ணீரில் மூழ்கியது. அப்பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை மாண்டி மாவட்ட நிர்வாகத்தால் மீட்கப்பட்டனர். கனமழையால் பஞ்சார் காய்கறி சந்தையும் வெள்ளத்தில் மூழ்கியது. அகரா பஜார் பார்க்கிங்கில் இருந்து ஒரு கார் பியாஸில் அடித்துச் செல்லப்பட்டது.
இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் இன்று முழுவதும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திங்கள்கிழமை வரை ஜம்மு காஷ்மீரின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும், கிழக்கு ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா