தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இதுதொடர்பாக தெரிவித்துள்ள நிலையில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவையின் சோலையாறு, சின்னக்கல்லார் பகுதிகளில் தலா 10 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே, வடக்கு ஒரிசா கடலோர பகுதியில் நிலைகொண்டுள்ள அடர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்ககூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திற்கு பலத்த காற்று வீசுவதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள தனுஷ்கோடியில் ராட்சத அலைகளுடன் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. ராட்சத அலையின் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் அருகில் சென்று செல்பி எடுத்து வரும் நிலையில், இது தொடர்பாக நியூஸ்7 தமிழில் செய்தி ஒளிபரப்பானது. இதன் எதிரொலியாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.