போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரங்கள் குறித்து தகவல் தெரிவிக்க சென்னை மாநகராட்சி தொடர்பு எண்களை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் சென்னை தலைமை செயலகம் அருகே மழை காரணமாக மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இதனையடுத்து மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் வீழும் நிலையில் உள்ள மரங்கள் குறித்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்க தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பாதுகாப்பற்ற முறையில் விழும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகள் குறித்து 1913 என்ற உதவி எண்ணிற்கும் 044-2561 9206.044 2561 9207 மற்றும் 044 2561 9208 ஆகிய கட்டுப்பாட்டு அறை எண்களுக்கும், வட்டார துணை ஆணையாளர் அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களிலும் தகவல் தெரிவிக்கலாம்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பாதுகாப்பற்ற முறையில் விழும் நிலையில் உள்ள 19,025 மரங்களின் கிளைகள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பேருந்து மற்றும் உட்புறச் சாலைகளில் 34,224 சாலைகளில் சுமார் 175309 மரங்கள் உள்ளன.
மாநகராட்சியின் சார்பில் பருவமழை காலத்திற்கு முன்னதாகவே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் விழும் நிலையில் உள்ள மரக்கிளைகளை அகற்ற ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக, மாநகராட்சியில் 6 நவீன ஹைட்ராலிக் இயந்திரங்களும், 2 மரம் அறுக்கும் இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் 15 மண்டலங்களிலும் உள்ள 371 கையினால் இயக்கும் மர அறுவை இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 3 மாதங்களில் போக்குவரத்திற்கு இடையூறாகவும். விழும் நிலையில் இருந்த சுமார் 19,025 மரக்கிளைகள் மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளது.








