தமிழகத்தில் பதவி ஏற்க உள்ள புதிய அரசுக்காக தலைமைச் செயலகம் தயாராகி வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வரும் 7ம் தேதி பதவி ஏற்க உள்ளார். அவரைத் தொடர்ந்து அமைச்சரவையில் பங்கேற்கும் அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர். இதனைத்தொடர்ந்துபுனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமை செயலகத்தில் முதலமைச்சரும், அமைச்சர்களும் தங்கள் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இந்த நிலையில் தற்போது பதவியை விட்டு விலகும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் அறைகளில் இருந்த முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் படங்கள் அகற்றப்பட்டுள்ளன. அமைச்சர்களின் அலுவலக அறைகளில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர்களின் பெயர் பலகைகளும் அகற்றப்பட்டுள்ளன.
புதிதாக பொறுப்பேற்க உள்ள அமைச்சர்களின் விருப்பத்துக்கு ஏற்ப அறைகளில் புதிய வசதிகளும் செய்யப்பட உள்ளன. இதற்காக தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய அமைச்சரவையில் இடம் பெற உள்ள அமைச்சர்களின் பெயர்கள், அவர்களுக்கான துறைகளும் ஒதுக்கப்பட்ட பின்னரே அவர்களுக்கான அறைகள் தயாராகும். புதிய அமைச்சர்களின் ஆலோசனைகளுடன் அறைகளில் மாற்றங்களும் மேற்கொள்ளப்படும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறி உள்ளன.







