கோபி அருகே, 50 அடி ஆழ பள்ளத்தாக்கில் குதித்து, தலைமை காவலர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டார்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள அந்தியூர் நகலூரைச் சேர்ந்த வேலுச்சாமி, பங்களாபுதூர் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு ரம்யா என்ற மனைவியும், 7 மற்றும் 2 வயதுகளில் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், வேலுச்சாமிக்கும், மனைவிக்கும் இடையே சில நாட்களாக குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2 நாட்களாக விடுமுறையில் இருந்த வேலுச்சாமி, மீண்டும் பணிக்கு திரும்பவில்லை. இதற்கிடையே, அவரது கார் நீண்டநேரமாக, கடம்பூர் அருகே உள்ள மல்லியதுர்கம் கோனபாறை என்ற இடத்தில் நிற்பதாக, அந்த வழியாக சென்றவர்கள் கடம்பூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் அங்கு வந்து ஆய்வு செய்தபோது, பள்ளத்தாக்கில் முனகல் சத்தம் கேட்டுள்ளது.
இதையடுத்து, போலீசார், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த வேலுச்சாமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.









