தடுப்பணை கட்ட அனுமதி பெறப்பட்டதா? கேரள அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி!

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு,  சுற்றுச்சூழல் துறை,  தேசிய வனவிலங்குகள் வாரியத்தின் அனுமதி பெறப்பட்டதா என கேரள அரசுக்கு தென்னிந்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.  கேரளாவின் இடுக்கி மாவட்டம் தேவிகுளம்…

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு,  சுற்றுச்சூழல் துறை,  தேசிய வனவிலங்குகள் வாரியத்தின் அனுமதி பெறப்பட்டதா என கேரள அரசுக்கு தென்னிந்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. 

கேரளாவின் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் அருகே பெருகுடா என்ற இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே அந்த மாநில அரசு தடுப்பணை கட்டி வருகிறது.  அமராவதி அணையின் நீர் ஆதரமாக சிலந்தி ஆறு உள்ள நிலையில்,  தற்போது கேரள அரசு அணை கட்டி வருவது தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏனெனில் அமராவதி அணை மூலமாக திருப்பூர்,  கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 55,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.  அமராவதி ஆற்றுப் படுகையில் 110 கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.  சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து முழுவதும் குறைந்துவிடும் எனவும், குடிநீர் மற்றும் விவசாய பாசனத் தேவைக்கு தண்ணீர் கிடைக்காமல் போகலாம் எனவும் அச்சம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டும் விவகாரத்தை தாமாக முன்வந்து தென்னிந்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று விசாரணைக்கு எடுத்தது.  பசுமைத் தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா,  நிபுணர் சத்திய கோபால் அடங்கிய அமர்வு நாளிதழ்களில் வந்த செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவது குறித்து சுற்றுச்சூழல் துறை, தேசிய வனவிலங்குகள் வாரியத்தின் அனுமதி பெறப்பட்டதா என கேரள அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.  அப்படி அனுமதி பெறவில்லை என்றால் தடுப்பணை கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.  மேலும் இது தொடர்பாக கேரளா அரசும்,  தமிழ்நாடு அரசும் பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.