ஆலங்குளத்தை தமிழகத்தின் சிறந்த தொகுதியாக மாற்ற பாடுபவேன், என அத்தொகுதியில் போட்டியிடும் பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பனங்காட்டுப் படை கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அதன் நிறுவனத் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து இன்று முதல் ஆலங்குளம் தொகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட கீழப்பாவூர், சிவகாமிபுரம் உள்ளிட்ட பகுதியில், தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அவர், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் கூட்டத்தில் பேசிய ஹரி நாடார், தேர்தலில் வெற்றி பெற்றால் குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பேன், என உறுதி அளித்தார்.
ஆலங்குளத்தை தமிழகத்தின் சிறந்த தொகுதியாக மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், நாடார்களின் உரிமையை மீட்டெடுக்க பாடுபடுவேன், என்றும் தெரிவித்தார். வாக்குச் சேகரிப்பில் பனங்காட்டு படை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.







