கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியும், மும்பை அணியும் மோதியது. ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதனால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற முடியாமல் லீக் சுற்றுடன் நடையை கட்டியது. நேற்று நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்திலும் மும்பை அணி தோல்வியை தழுவியது. இந்த நிலையில், கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியின்போது 10-வது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். அப்போது திடீரென ஆவேசமடைந்த பாண்ட்யா, ஸ்டம்புகளை வேகமாக தட்டிவிட்டார்.
ஒரு போட்டியின்போது கிரிக்கெட் உபகரணங்கள் அல்லது ஆடைகள், மைதான உபகரணங்களை தவறாகப் பயன்படுத்துதல் தொடர்பான ஐபிஎல் நடத்தை விதி பிரிவு 2.2ன் கீழ் பாண்டியாவின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதன்மூலம் பாண்டியாவின் போட்டி ஊதியத்தில் 10 சதவீதம் அபராதமும், ஒரு தகுதிக்குறைப்பு புள்ளியும் விதிக்கப்பட்டது. இதையடுத்து பாண்டியா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, போட்டி நடுவர் ராஜீவ் சேத் விதித்த அபராதத்தை ஏற்றுக்கொண்டார்.







