“காவல்துறையின் செயல்பாடுகளை கண்டித்து பிப்.28ம் தேதி உண்ணாவிரத போராட்டம்” – ராமதாஸ் அறிவிப்பு!

தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையின் செயல்பாடுகளை கண்டித்து, வருகின்ற 28-ம் தேதி கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் என்றும் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவியை அரசு ஆண்கள் கல்லூரி மாணவர் பாலகிருஷ்ணன் என்பவர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கட்டாயப்படுத்தி அடித்து துன்புறுத்தி தாலி கட்ட முயன்றார். அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாமக சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக என் ஒப்புதலோடு மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர், பாமக தொண்டர்கள் மற்றும் மாணவிக்கு ஆதரவாக குவிந்த பொதுமக்களுடன் ஆர்ப்பாட்டத்தை நடத்திட சென்றபோது, கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் அழகேசன் தலைமையிலான மேற்கு காவல் துறையினர் மாவட்ட செயலாளரான ம.க.ஸ்டாலின், பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தினரையும், மகளிர் அணியினரையும் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்ய முயன்றனர்.

இந்நிலையில் போராட்டத்தை ஒடுக்க பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக பாமக சார்பில் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுப்பதை அறிந்து, ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் மாணவர் பாலகிருஷ்ணன் தாயாரிடம் காவல்துறையே புகாரை பெற்று, வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் காவல்துறையினர் ம.க.ஸ்டாலின் மீது பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவாக பாமகவினர் குரல் கொடுப்பதும், அவர்களுக்கான நீதியை போராடியும், சட்ட ரீதியாகவும் பெற்றுக்கொடுக்க போராடுவதும், ஒவ்வொரு முறையும் காவல்துறையினர் இதுபோன்று பொய்யான புகாரை பெற்று பாமகவினர் மீது வழக்குப்பதிவு செய்து, ஒடுக்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை காவல்துறையினர் கையாண்டு அப்பாவிகளை அச்சுறுத்தி, பணிய வைப்பது காவல்துறையினரின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது. பொய்யாக அளிக்கப்படும் வன்கொடுமை புகார் மீது உரிய விசாரணை நடத்தாமல் அப்பாவிகளை தண்டிப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?

நீதியை நிலைநாட்டிடும் வகையில் காவல்துறையினர் என்றைக்கு செயல்படுகிறார்களோ அப்போதுதான் இத்தகைய சமூக குற்றங்கள் குறையும் என்பதே களநிலவரம். “ஒருவரையும் பின் தங்கவிடமாட்டோம்” என்று முதல்வர் முழங்குவது தன் கட்சிக்காரகள் மற்றும் கூட்டணிக் கட்சிக்காரர்களுக்கு மட்டும்தானோ என்ற கேள்வி இப்போது பரவலாக எழத்தொடங்கிவிட்டது.

தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையின் செயல்பாடுகளை கண்டித்து, வருகின்ற 28-ம் தேதி காலை முதல் மாலை வரை ஆடுதுறை பேரூராட்சி முழுவதும் கடையடைப்பு மற்றும் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்படும் பேரணி சத்திரம் காம்பவுண்டில் நிறைவு பெறும். இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். இந்நிகழ்வுகள் பாமக செயல்தலைவர் ஸ்ரீகாந்தி தலைமையில் நடைபெறுகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி, சட்டமன்ற பாமக தலைவர் – கௌரவத் தலைவர் ஜி.கே.மணி மற்றும் பாமகவினர், வன்னியர் சங்கத்தினர், பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.