திருவெண்னைய்நல்லூரிலுள்ள மங்காளம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயிலில் ஆடி ஸ்வாதி நட்சத்திரத்தினை முன்னிட்டு சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் 63 நாயன்மார்களுக்கு நடைபெற்ற குரு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சைவக் குறவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் ஆடி மாதம் ஸ்வாதி நட்சத்திரத்தில் அவதரித்தார். தேவாரத்தைப் பாடிய இவர், திருத்தொண்டர் தொகை நூலை இயற்றியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்னைய் நல்லூரில் உள்ள மங்காளம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி ஸ்வாதி நட்சத்திரத்தன்று, சுந்தரமூர்த்தி நாயனாருக்கு குரு பூஜைகள் செய்யபட்டு விழா எடுக்கப்படும். அதன்படி இன்று மங்காளம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மஞ்சள், தேன், பால், விபூதி போன்ற சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் குரு பூஜைகள் சிறப்புடன் நடைபெற்றது.
இதையொட்டி, சுந்தரமூர்த்தி நிகழாண்டு ஸ்வாதி நட்சத்திரத் நாயனார் வெள்ளை யானையில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆடி மாத ஸ்வாதி நட்சத்திரத்தினை முன்னிட்டு, 63 நாயன்மார்களுக்குப் படையலிட்டு உச்சிகால பூஜைகள் செய்யப்பட்டன. குரு பூஜையை முன்னிட்டு சிவபெருமானுக்கு 20 கிலோ அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து, ஸ்வாதி நட்சத்திர குரு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இத்திருக்கோயில் சுந்தரமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும் இத்திருக்கோயில், திருவருட்துறை என்றும் அழைக்கப்படுகிறது. கருவறையில் அம்பிகை நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். சுந்தரருக்கும் கிழவனாக வந்த சிவபெருமானுக்கும் பெரியோர்களால் பஞ்சாயத்து நடைபெற்ற மண்டபம் இன்றும் இங்கே அமையப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
—சௌம்யா.மோ






