குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கான காலக்கெடு ஆகஸ்ட் 15 வரை நீடிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வேளாண் உழவர் நலத்துறை சார்பில் ‘வேளாண் சங்கமம் 2023’ என்ற தலைப்பில் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி திருச்சி கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று துவங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று முதல்-அமைச்சர் வேளாண் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :
“இந்த பயிர்கள் அனைத்தையும் பார்க்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தற்போது வேளாண் மகனாக மாறியுள்ளார். மற்ற துறைகளை வளர்க்க நிதிவளம் இருந்தால் போதும். ஆனால் வேளாண் துறைக்கு நீர்வளமும் அவசியம். நமது ஆட்சியில் நீர் வளமும் கை கொடுத்துள்ளது.
மண் வள மேலான்மை, இளைஞர்களைத் தொழில் முனைவோர் ஆக்குதல் என எண்ணற்ற திட்டங்கள் விவசாய துறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 119 லட்சத்து 96 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு விவசாயத்தின் வாயிலாக மொத்தமாக பயிர்களை பெற்றுள்ளோம்.
நடப்பண்டு 5.36 லட்சம் ஏக்கரில் குருவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறுவை சாகுபடியில் 47 ஆண்டுகளில் நிகழாத சாதனையை நாம் செய்துள்ளோம்.
தமிழ் மண் வளம் என்கிற இணையதளத்தை துவங்கி வைத்துள்ளேன். மத்திய அரசால் அறிவிக்கப்பட்டதை விட சன்ன நெல் குவிண்டாலுக்கு 100 ரூபாயும்,இதர நெல்லுக்கு 75 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது.
திமுக அரசு அமைந்த பிறகு 1 லட்சம் மின் இணைப்பு கொடுத்தோம். அதற்கு பின்னர் 50 ஆயிரம் பேருக்கு வழங்கினோம். தற்போது மீண்டும் 50 ஆயிரம் பேருக்கு வழங்குகிறோம்.
10 வருடமாக கடந்த ஆட்சியில் 2.20 லட்சம் விவசாய மின் இணைப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு விவசாய மின் இணைப்பை வழங்கி உள்ளோம். நாம் சொல்வதை செய்வோம்,சொல்லாததையும் செய்வோம்.
இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வேளாண்மையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் முக்கியமாக இந்த கண்காட்சியை பார்வையிட வேண்டும். வேளாண்மை என்பது வாழ்கை மற்றும் பன்பாடாக மட்டுமே உள்ளது. ஆனால் அவர்கள் லாபம் அடைய வேண்டும்.
விவசாயிகளுக்கு மூலதனம் மற்றும் கடன் உதவி வழங்கப்படுகிறது. வேளாண் துறை விரும்பி வரக் கூடிய துறையாக மாற வேண்டும். வேளாண் துறை வர்த்தக துறையாக மாற வேண்டும். இந்த கண்காட்சியை அனைத்து மாவட்டத்திற்கும் எடுத்துச் செல்லுங்கள்.
குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கான காலக்கெடு ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்டுகிறது. அதே போல் திட்டத்திற்கான நிதி 75 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், தங்கம் தென்னரசு, எ.வ. வேலு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.







