மலையாள சினிமா நடிகைகளின் நலன்கருதி திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் சினிமா சில்மிஷ குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ள ஹேமா கமிஷன் அறிக்கையை பொதுவெளியில் வெளியிடப்போவதில்லை என கேரளா அரசு முடிவெடுத்துள்ளது.
கடந்த 2017ல் காரில் கொச்சி நோக்கி சென்ற பிரபல நடிகை கடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதுகுறித்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, கேரளாவில் டபிள்யூ.சி.சி என்ற அமைப்பை பிரபல நடிகைகள் ஒண்றினைந்து உருவாக்கினர். அவர்கள் சினித்துறையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவர்கள் கோரிக்கைகளை ஏற்று நீதிபதி ஹேமா என்பவர் தலைமையில் தனி நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. நடிகைகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவர்களிடம் ஹேமா கமிஷன் விசாரணை மேற்கொண்டது. அப்போது பெரும்பாலானோர் பாலியல் சீண்டல்கள் திரைத்துறையில் அதிகளவு இருப்பதாக குற்றம் சாட்டியதாக தெரிகிறது. பெரும்பாலான நடிகைகள் தங்களது அந்தரங்க பிரச்சனைகள் மனம் திறந்து கூறியிருப்பதால் இதன் அறிக்கையை பொதுவெளியில் வெளியிட வேண்டாம் என கேரள அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக அரசிடம் அளிக்கப்பட்டுள்ள ஹேமா கமிஷன் அறிக்கை தொடர்பாக சினிமாத்துறையில் உள்ள பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் சஜி செரியன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் நடிகைகள் இணைந்து உருவாக்கியுள்ள டபிள்யூ.சி.சி அமைப்பினர், ஹேமா கமிஷனில் உள்ள தகவல்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் சஜி செரியனோ, திரைத்துறையில் உள்ள பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக பேசியிருப்பதால், அவர்களின் எதிர்காலம் கருதி அதனை பொது வெளியில் வெளியிடப்போவதில்லை. ஆனால் ஹேமா கமிஷன் அளித்துள்ள பரிந்துரைகள் பொது வெளியில் வெளியிடுவதில் எங்களுக்கு எவ்வித தயக்கமும் இல்லை. நடிகைகளின் பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்யும் எனக் கூறியுள்ளார். ஆனால் நடிகைகள் சங்கமோ, இதனை பொதுவெளியில் வெளியிட்டால் மட்டுமே தவறான கண்ணோட்டத்தோடு திரைத்துறையில் இருக்கும் ஆண்களுக்கு ஓர் அச்சம் ஏற்படும் எனக்கூறியுள்ளது.