ஒப்பந்த புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு

உலக அளவில் ஒப்பந்த புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்து வதற்கு எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்…

உலக அளவில் ஒப்பந்த புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்து வதற்கு எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டிய அவசியத்தை முதலமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒன்றிய அரசு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. 18 வயதில் இருந்து 45 வயது வரை உள்ளவர்களுக்கு, மாநில அரசுகளே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி தமிழகத்திற்கு சுமார் 13 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது போதிய அளவில் இல்லாததால், உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, குறுகிய காலத்துக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை அரசு முனைப்புடன் எடுக்கும்.

தமிழகத்தின் ஆக்சிஜன் பயன்பாட்டை ஒப்பிடும்போது, நமது மாநிலத்திற்கான மத்திய அரசின் ஒதுக்கீடு குறைவாகவே இருக்கிறது. இதை உயர்த்தி வழங்க முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 280 டன்னில் இருந்து 419 டன்னாக உயர்த்தப்பட்டுள்ளபோதும் இன்னும் கூடுதல் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

அதனால் கூடுதல் ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளை உடனடியாக அமைத்திடவும், தொழிற்சாலைகளில் இருந்து ரயில்கள் மூலம் ஆக்சிஜனை கொண்டு வருவதற்கும் அதை சீராக மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்வதற்கும் அனைத்து நடவடிக் கைகளை உடனடியாக எடுக்குமாறு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

இந்தக் கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.