ஆளுநர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழுவினர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நாளை சந்தித்து பேசுகின்றனர்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே அண்மைக் காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை பாராட்டும் நிகழ்வில் உரை நிகழ்த்திய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்று சொல்வதை விட, தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, கடந்த 9-ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரில் உரை நிகழ்த்திய ஆளுநர், தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் சில பகுதிகளை தவிர்த்ததுடன் தமிழ்நாடு அரசு என்ற சொல்லையே பயன்படுத்தவில்லை. பின்னர், தேசியகீதம் இசைக்கப்படுவதற்கு முன்னதாகவே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, என்.ஆர்.இளங்கோ, வில்சன் உள்ளிட்டோர் அடங்கிய தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை டெல்லியில் சந்தித்துப் பேசுகின்றனர். அப்போது, ஆளுநர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை குடியரசுத்தலைவரிடம் வழங்க உள்ளனர்.








