இந்த ஆண்டின் கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடித்து வைத்தார் ஆளுநர்.
ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத்தொடரும் ஆளுநர் அனுமதி பெற்ற பின் தொடங்கும். அந்த கூட்டத்தொடரை ஆளுநர் முடித்து வைத்தால், மீண்டும் சட்டமன்றத்தை கூட்டுவதற்கு ஆளுநரின் அனுமதி பெற வேண்டும். சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 17 – 19 ஆம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்தது. அந்த கூட்டத் தொடரை ஆளுநர் முடித்து வைத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆண்டின் முதல் கூட்டத் தொடரானது ஆளுநரின் உரையுடன், ஜனவரி மாதம் தொடங்கும். 2023 ஆம் ஆண்டிற்கான கூட்டத்தொடரை ஜனவரி 4 ஆம் தேதி அல்லது பொங்கல் பண்டிகைக்குப் பின் தொடங்க திட்டமிடப்பட்டு வருகிறது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும் கூட்டத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார். தொடர்ந்து அவரது உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். அத்துடன் அன்றைய சட்டசபைகூட்டம் நிறைவடையும்.ஆளுநர் உரையுடன் தொடங்கும் முதல் கூட்டத்தில், அரசின் ஒராண்டுக்கான செயல்திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகும். இந்தி திணிப்பிற்கு எதிரான கருத்துகள், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாகவும் உரையில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஆளுநரை திரும்பப்பெற திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர் குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ள நிலையில், சட்டப்பேரவை கூடவுள்ளது. எதிர்க்கட்சி துணைத்தலைவர் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புகளின் கடிதங்கள் சபாநாயகரின் பரிசீலனையில் உள்ள சூழலில் சட்டப்பேரவை கூடவுள்ளது. உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் கூட்டத்தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.