நீட் விலக்கு மசோதாவில் கையொப்பமிட மாட்டேன் என கூறுவதற்கு ஆளுநருக்கு
அதிகாரம் கிடையாது என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமயம் சட்டமன்றத் தொகுதி ராயவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியதாவது:
“ஆளுநரை தாண்டி இந்திய குடியரசுத் தலைவர் தான் நீட் விலக்க மசோதாவிற்கு கையெழுத்து போட வேண்டுமா? வேண்டாமா? என்று முடிவு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் மாநில ஆளுநருக்கு அதிகாரமே கிடையாது. தனக்கு இல்லாத அதிகாரத்தை தான் செயல்படுத்த மாட்டேன் என்று சொல்வதில் என்ன பெருமை. இவருக்கு அதிகாரமே கிடையாது. இல்லாத அதிகாரத்தை செயல்படுத்த மாட்டேன் என்று ஆளுநர் கூறுகிறார் இதற்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை என்று தெரிவித்தார்.







