ஒருநாள் ஆட்சியரான அரசுப் பள்ளி மாணவி!

புதுவை கதிர்காமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவி ஐஸ்வர்யா ஒருநாள் ஆட்சியராக பணியமர்த்தப்பட்டார். காலையில் அலுவலகம் வந்த அவரை வரவேற்ற ஆட்சியர் மணிகண்டன், ஆட்சியரின் இருக்கையில் அமரவைத்து பணி குறித்து…

புதுவை கதிர்காமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவி ஐஸ்வர்யா ஒருநாள் ஆட்சியராக பணியமர்த்தப்பட்டார்.

காலையில் அலுவலகம் வந்த அவரை வரவேற்ற ஆட்சியர் மணிகண்டன், ஆட்சியரின் இருக்கையில் அமரவைத்து பணி குறித்து விளக்கமளித்தார். குறிப்பாக ஆட்சியருக்கு வரும் கோப்புகள், புகார்களைக் கையாளுவது, பொதுமக்களை அணுகுவது குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினார். அதன்பின் அவர் ஆட்சியர் மணிகண்டனுடன் சென்று நகர்ப்பகுதியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர், சட்டப்பேரவைக்கு ஆட்சியருடன் மாணவி வந்தார். அங்கு சட்டப்பேரவைத் தலைவர் செல்வத்தை சந்தித்தார். சட்டப்பேரவை வளாகத்தையும், பேரவைக் கூட்டம் நடக்கும் இடத்தையும் பார்த்தார். அங்கு பேரவைத் தலைவர் இருக்கை, முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எம்எல்ஏக்கள் இருக்கைகள் விவரத்தையும் செயல்படும் விதத்தையும் பேரவைத் தலைவர் செல்வம் விவரித்தார். பிறகு பேரவையை சுற்றிக்காட்டி விளக்கினார்.

இதையும் படிக்க: ஈரோடு இடைத்தேர்தல்: ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை

இதுகுறித்து, மாணவி ஐஸ்வர்யா கூறியதாவது: புதுவையில் ஒருநாள் ஆட்சியராக பொறுப்பேற்று பணிபுரிந்தது மறக்க முடியாதது. சாதாரண பொதுமக்களின் குறைகளைக் கேட்டு அவற்றை நிவர்த்தி செய்வது குறித்து அறிந்துகொண்டேன். ஆட்சியர் என்றால் கையெழுத்திடுவது மட்டும் வேலை அல்ல.நானும் படித்து ஆட்சியராக தொடர்ந்து மக்களுக்குப் பணி செய்ய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்றார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் மணிகண்டன் கூறுகையில், “ஆட்சியருடன் ஒரு நாள் நிகழ்வில், அரசுப் பள்ளி மாணவி தேர்வாகி அரசு நிர்வாகம் செயல்பாடு, மக்கள் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்தல் ஆகியவற்றை நேரில் பார்த்தார். இதன் மூலம் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையப் படிப்புகள், இந்திய ஆட்சிப் பணி செயல்பாடுகள் பார்த்தார். அரசுப் பள்ளி குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் செயல்படவும், இந்திய ஆட்சிப் பணி விவரங்கள் அறியவும் வாய்ப்பாக அமையும். இந்த முறை வாரந்தோறும் புதன்கிழமை இனி செயல்படுத்தப்படும்” என்றார்.

பின்னர் ஆட்சியர் அலுவலகத்துக்கு ஆட்சியரும், மாணவியும் புறப்பட்டபோது காவல்துறை சல்யூட் அடித்து அனுப்பிவைத்தனர். மாணவி தனது கைவிரலை உயர்த்தி தனது மகிழ்வை வெளிப்படுத்தியப்படி புறப்பட்டார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.