தமிழக அரசுக்கு சிறப்பு நிதி உதவி வழங்குவது உள்ளிட்ட 3 தனிநபர் மசோதாக்களை மக்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தாக்கல் செய்தார்.
மக்களவையில் இன்று மதியம் அவை உறுப்பினர்கள் சார்பில் தனிநபர் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, தென்சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் சார்பில் மூன்று மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
அதனை தொடர்ந்து பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், “உள்கட்டமைப்பு, வீடு, குடிநீர், சாலை, சுகாதார வசதி உள்ளிட்டவற்றிற்கும், திறன் மேம்பாடு, விளிம்பு நிலை பெண்கள், குழந்தைகள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு திட்டங்களை வகுக்கவும், இன்னும் சில முக்கிய திட்டங்களை உரிய முறையில் செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசுக்கு சிறப்பு நிதி உதவி அளிக்கும் மசோதாவை தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.
https://twitter.com/ThamizhachiTh/status/1601184481653981189
அதேபோல் “ஆதரவின்றி தவிக்கும் மூத்தகுடிமக்கள், விதவைகள் போன்றோருக்கு வீட்டுவசதியை அளிக்க வகை செய்யும் ஒரு மசோதாவையும், இணைய முடக்கத்தை தடுத்து இணைய பாதுகாப்புக்காக ஒரு அமைப்பை உருவாக்க வழிவகை செய்யும் மசோதா தனி நபர் மசோதாக்களையும் தமிழச்சி தங்கபாண்டியன் தாக்கல் செய்தார்.







