27 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கத்தை புதுப்பித்து சர்வதேச போட்டிகளை நடத்தும் தீவிர பணியினை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
உலகின் கிளாஸ் ஆன கேம் என்றாலே அது டென்னிஸ் விளையாட்டு தான். உலகெங்கும் தனி ரகமான ரசிகர்களை கொண்ட டென்னிஸ் விளையாட்டு போட்டிகள், எங்கு நடந்தாலும் அவை அந்த இடத்தின் அடையாளமாகவே பேசப்படும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவ்வாறு சென்னையின் அடையாளமாய் கிட்டத்தட்ட 27 வருடங்களாக விளங்கி வரும் ஒன்று தான் சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கம். 1995 இல் நிறுவப்பட்ட இந்த அரங்கம் 1997 முதல் சென்னை ஓபன் டென்னிஸ் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்தி வந்துள்ள நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நிர்வாக சிக்கல் காரணமாக சென்னை ஓபன் விளையாட்டு போட்டிகள் இங்கு நடத்தப்படுவதில்லை.
1995 இல் கட்டப்பட்ட கட்டுமானங்களை கொண்ட பிரம்மாண்ட அரங்கம், 7 ஆடுகளங்களை கொண்ட வரலாற்று சிறப்புமிக்க பல நினைவுகளை உள்ளடக்கிய இடமாக காட்சியளிக்கிறது.
உலகின் முன்னணி நட்சத்திரங்களாக விளங்கிய கார்லோஸ் மோயா, போரிஸ் பெக்கர், பெட் ராப்டர், சானியா மிர்சா மற்றும் தற்போதைய நட்சத்திரங்களான ரபேல் நாடல் உள்ளிட்டோர் விளையாடிய ஆடுகளம் என இதற்கு தனி சிறப்புண்டு.
ஆனால் தற்போது 5 வருடங்கள் போட்டிகள் ஏதும் நடத்தப்படாத நிலையில், பராமரிப்பு இன்றி ஆங்காங்கே சிதிலமடைந்து காணப்பட்டது. பார்வையாளர்கள் இருக்கைகளில் ஆங்காங்கே புறாக்களின் எச்சமும், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளே நீர் வடிவதனால் செயற்கை கூரை பெயர்ந்து விழும் அவலமும் நிலவி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன் மைதானம் பராமரிப்பு குறித்து முதலமைச்சரிடம் முறையிட்டது மூலம், முதலமைச்சர் உத்தரவின் பேரில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்ததை அடுத்து, அரங்கத்தை சர்வதேச போட்டிகள் நடத்தும் முனைப்பில் பணிகள் தீவிரம் ஆக்கப்பட்டுள்ளன.
இதற்காக ரூ.1.48 லட்சம் செலவில், விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்தும் பணிகள் பொதுப்பணித்துறை மூலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆடுகளங்களை ஆஸ்திரேலிய ஆடுகளம் தரத்தில் சிந்தடிக் ஆடுகளமாகவும், இரவு நேரங்களில் போட்டிகளை நடத்த ஏதுவாக நவீன பிளட் லைட்டுகள் அமைக்கும் பணிகள், நீர் வடிகால் அமைப்புகள், கழிவறை வசதிகள் உள்ளிட்டவை அமைச்சரின் உத்தரவின் பேரில் நடைபெற்று வருகிறது.
5 ஏக்கர் நிலப்பரப்பில் 7000 பேர் இருக்கைகள் கொண்ட தென்னிந்தியாவின் சிறப்பு வாய்ந்த அரங்கங்களில் ஒன்றான சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கம் தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. விளையாட்டு அரங்கத்தை தயார் செய்ததன் பின்னர், அனைவரின் எதிர்பார்ப்பின் விளிம்பில் இருக்கும் சென்னை ஓபன் மற்றும் பல சர்வதேச போட்டிகளை நடத்தும் தீவிர பணியை தமிழ்நாடு அரசு கையெடுத்துள்ளது.
இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வளாகங்களை சீரமைத்து, வரலாற்று சிறப்புமிக்க பல போட்டிகளை நடத்துவதன் மூலம் ஒவ்வொரு இடமும் புத்துயிர் பெற்று, அவை அடையாளமாக பேசப்படும் என்பதே அனைவரின் எண்ணமாக பார்க்கப்படுகிறது.